Archives: மார்ச் 2022

தேவனின் தூதரகம்

லூத்மில்லா என்னும் 82வயது நிரம்பிய விதவை தாயார், செக் குடியரசு நாட்டிலுள்ள தன் வீட்டை, “பரலோக இராஜ்யத்தின் தூதரகம்” என்றும், “என் வீடு கிறிஸ்துவின் இராஜ்யத்தின் விரிவாக்கம்” என்றும் கூறுகிறார். தேவையோடு இருக்கிற மக்களையும், சிநேகிதர்களையும் அவர் தன் வீட்டிற்கு வரவேற்று, இரக்கத்தோடும், ஜெபஆவியோடும் அவர்களுக்கான ஆகாரத்தையும், தங்குமிடத்தையும் கொடுக்கிறார். தன் வீட்டிற்கு வருபவர்களுக்காக அவர் கரிசணையோடு செய்யும் உபகாரங்களுக்கு, அவர் பரிசுத்த ஆவியானவரின் உந்துதலை சார்ந்து, அவர்களின் ஜெபங்களுக்கு தேவன் பதிலளிக்கும் முறைகளைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்.

ஒரு ஓய்வுநாளில் இயேசுகிறிஸ்து, பரிசேயன் ஒருவன் வீட்டில் விருந்துண்ண போகிறார். அதற்கு முரணாய் தன் வீட்டையும், இருதயத்தையும் திறந்து கொடுத்து இயேசுவுக்கு லூத்மில்லா ஊழியம் செய்கிறார். இயேசு, அந்த வேதபாரகனைப் பார்த்து, “நீ விருந்து பண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக” திருப்பி செலுத்துகிறவர்களை அழைக்க வேண்டாம் என்கிறார் (லூக்கா 14:13). அந்த பரிசேயன், தன்னுடைய பெருமையை வெளிக்காண்பிப்பதற்காய் இயேசுவை அழைத்திருக்கிறான் (வச.12) என்பதை இயேசுவின் பதிலிலிருந்து நாம் அறியலாம். ஆனால், “தேவனுடைய அன்பையும், ஞானத்தையும் பிரதிபலிக்கும் கருவியாய்” லூத்மில்லா, பல ஆண்டுகளாய் மக்களை தன் வீட்டிற்கு வரவேற்று உபசரிக்கிறார்.

மற்றவர்களுக்கு மனத்தாழ்மையோடு சேவை செய்வது, “தேவனுடைய இராஜ்யத்தின் தூதுவராய்” இருக்க ஒரு வழி. மற்றவர்களுக்கு தங்க வசதி செய்துகொடுக்க முடியாவிட்டாலும், அவர்களின் தேவையை முன்னிறுத்தி நமக்கேற்ற வழிகளில் அவர்களுக்கு உதவலாம். இன்று நம் உலகத்தில் தேவனுடைய இராஜ்யத்தை எவ்வாறு விரிவடையச் செய்யலாம்? 

தேவன் கறைகளைக் கழுவுகிறார்

நாம் குடிக்கும் பானங்கள் சிந்தி கறைபடியும் நம்முடைய துணியானது அதுவாகவே தன்னை சுத்தப்படுத்திக்கொண்டால் எப்படியிருக்கும்? பிபிசி செய்தியின்படி, சீன ஆய்வளார்கள் துணியின் மீது பூசப்படும் ஒருவிதமான பூச்சை கண்டுபிடித்தனர், “புறஊதா விளக்குகளில் காண்பிக்கும்போது, பருத்தி உடைகள், கறைகளையும், துர்நாற்றத்தையும் தானே சுத்திகரித்துக் கொள்ளுமாம்.” தானே சுத்திகரித்துக் கொள்ளும் துணிகளின் பாதிப்புகள் உங்களுக்குத் தெரிகிறதா?

தானே சுத்திகரித்துக் கொள்ளும் மேற்பூச்சு, கறைகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால், கறைபடிந்த உள்ளத்தை தேவனால் மட்டுமே சுத்திகரிக்க முடியும். பண்டைய யூதேயா ஜனங்கள் கறை படிந்தவர்களாய், விக்கிரக ஆராதனைக்கு தங்களை உட்படுத்தி, தேவனுக்கு புறமுதுகைக் காட்டினதினால் தேவன் அவர்கள் மீது கோபங்கொள்ளுகிறார் (ஏசாயா 1:2-4). அத்துடன் அவர்கள் தங்களை சுத்திகரித்துக் கொள்வதற்கு பலிகளை செலுத்தி, தூபங்காட்டி, பல்வேறு ஜெபங்களை ஏறெடுத்து, சபைக்கூடி வருதலையும் ஆசரித்து, நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றனர் (வச.12-13). அதற்கு தீர்வு, அவர்கள் தங்கள் பாவத்தை உணர்ந்து மனந்திரும்பி, தங்கள் உள்ளத்தில் இருக்கும் பாவகறைகளை பரிசுத்தமும் அன்புமான தேவனிடத்தில் கொண்டு வரவேண்டும். அவருடைய கிருபை அவைகளை சுத்திகரிக்கும். அவைகள் “உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்” (வச.18). 

நாம் பாவம் செய்யும்போது, அதுதானாகவே தன்னை சுத்திகரித்துக்கொள்ளாது. மனந்திரும்புதலின் இருதயத்தோடும், தாழ்மையோடும் நம்முடைய பாவத்தை நாம் அறிக்கையிட்டு அவற்றை சுத்திகரிக்கும் தேவனுடைய பரிசுத்த ஒளியிடத்தில் சமர்பிக்க வேண்டும். அவைகளிலிருந்து விடுபட்டு தேவனிடத்திற்கு திரும்ப வேண்டும். நம்முடைய இருதயத்தை சுத்திகரிக்கும் வல்லமை கொண்ட ஒரே தேவன், நமக்கு மன்னிப்பை அருளி, அவரோடு ஒப்புவரவாகும்படி செய்வார். 

அறிவின் எல்லைகளைக் கடந்து

கோவிட்-19 தொற்றின் காரணமாக, தங்கள் வேலைகளை இழந்த அநேகருடைய வரிசையில் என் கணவரும் ஒருவர். அது, எங்கள் வாழ்வின் கடினமான நாள். தேவன் எங்கள் தேவைகளை சந்திப்பார் என்று நாங்கள் விசுவாசித்தோம். ஆனால் அது எப்படி நடக்கும் என்ற நிச்சயமில்லாமை எங்களை பயமுறுத்தியது.

குழப்பமான என் மனநிலைகளை கடக்கையில், பதினாறாம் நூற்றாண்டின் கவிஞர், சிலுவையின் ஜான் என்பவரின் பாடல்வரிகளை நினைத்து பார்த்தேன். “போகும்பாதை அறியாமல், உள்ளே சென்றேன்” என்று தலைப்பிடப்பட்ட அந்த பாடல், அர்பணிப்பின் பிரயாணம் மனிதஅறிவின் அனைத்து எல்லைகளையும் கடந்து, அனைத்திலும் தெய்வீகத்தை கண்டுகொள்ளும் ஆச்சரியத்தை சித்தரிக்கிறது.. எனவே நானும், எனது கணவரும் அந்த காலகட்டத்தில் அதைச் செய்ய முயற்சித்தோம். எங்களால் புரிந்துகொள்ளக்கூடிய, சமாளிக்கக்கூடியவைகளின் மீதிருந்த எங்கள் கவனத்தை; எங்களை சுற்றிலும் அழகான, எதிர்பாராத, விந்தையான வழிகளில் வெளிப்படும் தேவன் மீது திருப்பினோம்.

பவுல் அப்போஸ்தலன், காணப்படுகிறவைகளிலிருந்து காணப்படாதவைகளுக்கு, வெளித்தோற்றத்திலிருந்து உள்ளான நிஜத்திற்கு, தற்காலிக துன்பங்களிலிருந்து “மிகவும் அதிகமான நித்திய கனமகிமைக்கு” விசுவாசிகளை அழைக்கிறார் (2 கொரிந்தியர் 4:17).

அவர்களுடைய போராட்டங்களை குறித்து கரிசனை இல்லாமல் பவுல் இவ்வாறு வலிறுயுறுத்தவில்லை மாறாக அவர்கள் புரிந்தகொள்ளக் கூடியவைகளை அவர்கள் விட்டுவிடுகையில் தான் அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கும் ஆறுதல், சந்தோஷம் மற்றும் நம்பிக்கையை அவர்களால் அனுபவிக்க கூடும் என்று அவர் அறிந்திருந்தார். (வச.10,15-16). கிறிஸ்துவின் ஜீவியம் எல்லாவற்றையும் புதிதாக்குகிறது என்பதை அவர்களுக்கு அறியச்செய்வதற்காகவே பிரயாசப்படுகிறார்.

அவருடைய சமாதானம்

என்னுடைய பணியிடத்தில் ஏற்பட்ட சூழ்ச்சிகளை, பல மாதங்களாய் என்னால் சமாளிக்க முடிந்தது. கவலைப்படுவது என்பது எனக்கு இரண்டாம் பட்சம். நான் ஆச்சரியப்படும் வகையில் சமாதானமாய் உணர்ந்தேன். கவலைப்படுவதற்கு மாறாக, என்னுடைய எண்ணமும், மனமும் அமைதலாக இருந்தது. இந்த சமாதானம் தேவனிடத்திலிருந்தே வந்திருக்கும் என்பதை நான் அறிவேன். 

அதற்கு முற்றிலும் முரணாய், என்னுடைய வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் எல்லாம் நன்றாக நடந்துகொண்டிருந்த போதும் என் இருதயம் மிகவும் அமைதலற்று இருந்தது. நான் தேவனையும், அவர் நடத்துதலையும் நம்புவதை விட்டுவிட்டு, என் சுயதிறமையின் மீது நம்பிக்கை வைத்ததே அதற்கான காரணம் என்பதையும் நான் அறிவேன். என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்து, மெய்யான தேவசமாதானம் என்பது சூழ்நிலைகள் தீர்மானிப்பது அல்ல; மாறாக, அது தேவனை நம்புவதாலே உண்டாகும் என உணர்ந்தேன்.

நம் சிந்தை உறுதியாயிருக்கையில், தேவசமாதானம் நமக்கு கிடைக்கும் (ஏசாயா 26:3). ‘உறுதி’ என்ற எபிரெய வார்த்தையின் அர்த்தம், “சாய்ந்து கொள்வது” என்பதாகும். நாம் அவர்மீது சாய்ந்து கொள்ளும்போது, அவருடைய மெய்யான இளைப்பாறுதலை நாம் அனுபவிக்கலாம். அவர் அகந்தையுள்ளவர்களையும் துன்மார்க்கரையும் தாழ்த்தி, அவரை நேசிக்கிறவர்களின் வழிகளை செம்மையாக்குகிறவர் என்பதை நினைவுகூர்ந்து தேவனை நாம் நம்பலாம் (வச. 5-7). 

என் கடினமான வேளைகளில் நான் சமாதானத்தை அனுபவிக்கையில், தேவசமாதானம் என்பது துன்பங்களே இல்லாத நிலை அல்ல என்றும், துன்பங்களின் நடுவிலும் நம்மை மிக பாதுகாப்பாய் உணரச்செய்வதே தேவசமாதானம் என்பதை நான் கண்டுபிடித்தேன். மிகவும் கடினமான வாழ்க்கைச் சூழல்களிலும் நம் அறிவையும், புரிதலையும் கடந்து நம் இருதயத்தை இந்த தேவசமாதானம் ஆளுகைச் செய்கிறது (பிலிப்பியர் 4:6-7).

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனால் விரும்பப்படுதலும், நேசிக்கப்படுதலும்

முகநூலில் “பிடித்திருக்கிறது” என்பதற்கு அடையாளமான அந்த விருப்ப குறி பொத்தான் முகநூலின் ஆரம்பத்திலிருந்தே இருப்பது போலத் தோன்றும். ஆனால் அது 2009 இல் தான் நடைமுறைக்கு வந்தது.

இந்த ‘விருப்ப’ பொத்தானை வடிவமைத்த ஜஸ்டின் ரோசன்ஸ்டைன் கூறுகையில், ‘ஒருவரையொருவர் கிழித்து கீழ்த்தள்ளும் உலகத்திற்கு மாறாக, ஊக்கப்படுத்தி உயர்த்தும்’ ஒரு உலகை உருவாக்கத் தான் விரும்பியதாகத் தெரிவித்தார். ஆனால் தனது கண்டுபிடிப்பு, பயனாளர்களை இந்த சமூக ஊடகத்தின் அடிமையாக்கிய விளைவைக் கண்டு ரோசன்ஸ்டைன் வருந்தினார்.

ரோசன்ஸ்டைனின் இந்த படைப்பு, நமது இணைப்பு மற்றும் அங்கீகாரத்திற்கான அடிப்படைத் தேவையை வெளிப்படுத்துவதாக நான் எண்ணுகிறேன். பிறர் நம்மை அறியவும், கவனிக்கவும், விரும்பவும் வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ‘விருப்ப’ பொத்தான்தான் புதியது, ஆனால் அறிவதற்கும், அறியப்படுவதற்குமான நமது விருப்பம், தேவன் மனிதனை உண்டாக்கிய நாள் தொட்டே உள்ளது.

இன்றும், ‘விருப்ப’ பொத்தான் நமது விருப்பத்தைத் தனிக்கவில்லை. சரிதானே? அதிர்ஷ்டவசமாக மின்னியல் அங்கீகாரத்தை விட, மிக ஆழமாக நேசிக்கும் தேவனை நாம் ஆராதிக்கிறோம். எரேமியா 1:5 ல் தனக்கென்று தீர்க்கதரிசியை அழைக்கையில், அதில் உள்ள ஆழ்ந்த நோக்கத்தையும், பிணைப்பையும் காண்கிறோம். “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி...என்றாா்.கருவுறுதலுக்கு முன்பே தீர்க்கதரிசியைத் தேவன் அறிந்திருந்தார். மேலும் அர்த்தமுள்ள, நோக்கம் நிறைந்த வாழ்க்கைக்காக அவரை வடிவமைத்தார் (வ. 8-10). நம்மை மிகவும் நெருக்கமாக அறிந்த, நேசிக்கும், விரும்பும் இந்த தகப்பனை நாம் அறிகையில், அவர் நம்மையும் ஒரு நோக்கமுள்ள வாழ்க்கைக்கு அழைக்கிறார். 

 

தாகமும், நன்றியுள்ளமும்

நானும் என் இரண்டு நண்பர்களும் ஒரு மலைப்பாதையில் சாகச பயணம் செய்ய விரும்பினோம். அதற்கு முன், எங்கள் நடைப்பயணத்தைத் தொடங்கும் போது போதுமான தண்ணீர் இருக்கிறதா என்று நாங்கள் சந்தேகப்பட்டதுபோலவே, அது வேகமாகத் தீர்ந்தது. விளிம்பை அடைய இன்னும் சில தூரமிருந்த நிலையில் நாங்கள் முற்றிலும் தண்ணீர் இல்லாமல் இருந்தோம். மூச்சுத் திணறி ஜெபத்துடன் சுவாசித்தோம். பிறகு நாங்கள் ஒரு மூலையைச் சுற்றி வருகையில், ஒரு அதிசயம் நடந்தது. மூன்று தண்ணீர் பாட்டில்கள் பாறையில் ஒரு பிளவில் மாட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம், “உங்களுக்கு இது தேவை என்று தெரியும். மகிழுங்கள்!” என்று ஒரு குறிப்புமிருந்தது. நாங்கள் ஒருவரையொருவர் நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டு, தேவனுக்கு நன்றி சொல்லி, மிகவும் தேவையான நீரைப் பருகி, கடைசிக் கட்டத்திற்குப் பயணித்தோம். நான் என் வாழ்நாளில் இவ்வளவு தாகமாகவும், நன்றியுடனும் இருந்ததில்லை.

சங்கீதக்காரனுக்கு மலையேறிய அனுபவம் இல்லை. ஆனால் ஒரு மானுக்குத் தாகமெடுக்கையில் எவ்வாறு செயல்படும் என்பதை அவர் அறிந்திருந்தார். (சங்கீதம் 42:1) தாகத்தாலும், பசியாலும், மானானது உயிர் பிழைப்பதற்காக நீரோடையை வாஞ்சித்துக் கதறுகிறது போல , “என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” (வ.1) என தேவனுக்கான அவனது விருப்பத்தை அவன் வெளிப்படுத்துகிறான்.

மிகவும் தேவையான நீரைப் போலவே, தேவன் நமக்கு எப்போதும் இருக்கும் உதவியாளர். நாம் அவருக்காக ஏங்குகிறோம், ஏனெனில் அவர் நமது சோர்ந்துபோன வாழ்க்கைக்குப் புதுப்பிக்கப்பட்ட பெலனையும், புத்துணர்ச்சியையும் தருகிறார், அனுதின பயணத்தில் எதுவாயிருந்தாலும் நம்மை ஆயத்தப்படுத்துகிறார்.

 

கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டது

எனது முதல் குறுகிய கால மிஷனரி பயணமாக, ஆற்றங்கரையில் சபையைக் கட்ட உதவுவதற்காக, ஒரிசாவில் உள்ள காட்டிற்குச் சென்றேன். ஒரு நாள் மதியம், அந்த பகுதியில் தண்ணீர் வடிகட்டி இருக்கும் சில வீடுகளில் ஒன்றிற்குச் சென்றோம். எங்களை ஏற்றுக்கொண்டவர், கலங்கியிருந்த கிணற்று நீரை வடிகட்டியின் மேல் ஊற்றியபோது, சில நிமிடங்களில் அனைத்து அசுத்தங்களும் அகற்றப்பட்டு சுத்தமான, தெளிவான குடிநீர் தோன்றியது. அந்த மனிதனின் வசிப்பிடத்தில், கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுவதன் அர்த்தம் என்ன என்பதை நான் பார்த்தேன்.

நாம் முதலில் நம் குற்ற உணர்ச்சியோடும், அவமானத்தோடும் இயேசுவிடம் வந்து, நம்மை மன்னிக்கும்படி கேட்கும்போதும், அவரை நம் இரட்சகராக ஏற்கும்போதும், அவர் நம் பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரித்து, நம்மைப் புதிதாக்குகிறார். கலங்கியிருந்த நீரைச் சுத்தமான குடிநீராக மாற்றியது போல் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். இயேசுவின் பலியால், நாம் தேவனுடைய நீதியாகிறோம் (2 கொரிந்தியர் 5:21) என்பதையும், மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என்பதையும் அறிவது எவ்வளவு மகிழ்ச்சி!

ஆனால் நாம் இனி ஒருபோதும் பாவம் செய்ய மாட்டோம் என்று அர்த்தம் இல்லை என்பதை அப்போஸ்தலன் யோவான் நமக்கு நினைவூட்டுகிறார். நாம் பாவம் செய்யும்போது, இந்த வடிகட்டியின் உருவகத்தைக் கொண்டு உறுதியடைவோம், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1 யோவான் 1:9) என்றறிந்து ஆறுதலடைவோம்.

நாம் தொடர்ந்து கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து நம்பிக்கையுடன் வாழ்வோம்.