Archives: மார்ச் 2022

தேவனின் தூதரகம்

லூத்மில்லா என்னும் 82வயது நிரம்பிய விதவை தாயார், செக் குடியரசு நாட்டிலுள்ள தன் வீட்டை, “பரலோக இராஜ்யத்தின் தூதரகம்” என்றும், “என் வீடு கிறிஸ்துவின் இராஜ்யத்தின் விரிவாக்கம்” என்றும் கூறுகிறார். தேவையோடு இருக்கிற மக்களையும், சிநேகிதர்களையும் அவர் தன் வீட்டிற்கு வரவேற்று, இரக்கத்தோடும், ஜெபஆவியோடும் அவர்களுக்கான ஆகாரத்தையும், தங்குமிடத்தையும் கொடுக்கிறார். தன் வீட்டிற்கு வருபவர்களுக்காக அவர் கரிசணையோடு செய்யும் உபகாரங்களுக்கு, அவர் பரிசுத்த ஆவியானவரின் உந்துதலை சார்ந்து, அவர்களின் ஜெபங்களுக்கு தேவன் பதிலளிக்கும் முறைகளைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்.

ஒரு ஓய்வுநாளில் இயேசுகிறிஸ்து, பரிசேயன் ஒருவன் வீட்டில் விருந்துண்ண போகிறார். அதற்கு முரணாய் தன் வீட்டையும், இருதயத்தையும் திறந்து கொடுத்து இயேசுவுக்கு லூத்மில்லா ஊழியம் செய்கிறார். இயேசு, அந்த வேதபாரகனைப் பார்த்து, “நீ விருந்து பண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக” திருப்பி செலுத்துகிறவர்களை அழைக்க வேண்டாம் என்கிறார் (லூக்கா 14:13). அந்த பரிசேயன், தன்னுடைய பெருமையை வெளிக்காண்பிப்பதற்காய் இயேசுவை அழைத்திருக்கிறான் (வச.12) என்பதை இயேசுவின் பதிலிலிருந்து நாம் அறியலாம். ஆனால், “தேவனுடைய அன்பையும், ஞானத்தையும் பிரதிபலிக்கும் கருவியாய்” லூத்மில்லா, பல ஆண்டுகளாய் மக்களை தன் வீட்டிற்கு வரவேற்று உபசரிக்கிறார்.

மற்றவர்களுக்கு மனத்தாழ்மையோடு சேவை செய்வது, “தேவனுடைய இராஜ்யத்தின் தூதுவராய்” இருக்க ஒரு வழி. மற்றவர்களுக்கு தங்க வசதி செய்துகொடுக்க முடியாவிட்டாலும், அவர்களின் தேவையை முன்னிறுத்தி நமக்கேற்ற வழிகளில் அவர்களுக்கு உதவலாம். இன்று நம் உலகத்தில் தேவனுடைய இராஜ்யத்தை எவ்வாறு விரிவடையச் செய்யலாம்? 

தேவன் கறைகளைக் கழுவுகிறார்

நாம் குடிக்கும் பானங்கள் சிந்தி கறைபடியும் நம்முடைய துணியானது அதுவாகவே தன்னை சுத்தப்படுத்திக்கொண்டால் எப்படியிருக்கும்? பிபிசி செய்தியின்படி, சீன ஆய்வளார்கள் துணியின் மீது பூசப்படும் ஒருவிதமான பூச்சை கண்டுபிடித்தனர், “புறஊதா விளக்குகளில் காண்பிக்கும்போது, பருத்தி உடைகள், கறைகளையும், துர்நாற்றத்தையும் தானே சுத்திகரித்துக் கொள்ளுமாம்.” தானே சுத்திகரித்துக் கொள்ளும் துணிகளின் பாதிப்புகள் உங்களுக்குத் தெரிகிறதா?

தானே சுத்திகரித்துக் கொள்ளும் மேற்பூச்சு, கறைகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால், கறைபடிந்த உள்ளத்தை தேவனால் மட்டுமே சுத்திகரிக்க முடியும். பண்டைய யூதேயா ஜனங்கள் கறை படிந்தவர்களாய், விக்கிரக ஆராதனைக்கு தங்களை உட்படுத்தி, தேவனுக்கு புறமுதுகைக் காட்டினதினால் தேவன் அவர்கள் மீது கோபங்கொள்ளுகிறார் (ஏசாயா 1:2-4). அத்துடன் அவர்கள் தங்களை சுத்திகரித்துக் கொள்வதற்கு பலிகளை செலுத்தி, தூபங்காட்டி, பல்வேறு ஜெபங்களை ஏறெடுத்து, சபைக்கூடி வருதலையும் ஆசரித்து, நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றனர் (வச.12-13). அதற்கு தீர்வு, அவர்கள் தங்கள் பாவத்தை உணர்ந்து மனந்திரும்பி, தங்கள் உள்ளத்தில் இருக்கும் பாவகறைகளை பரிசுத்தமும் அன்புமான தேவனிடத்தில் கொண்டு வரவேண்டும். அவருடைய கிருபை அவைகளை சுத்திகரிக்கும். அவைகள் “உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்” (வச.18). 

நாம் பாவம் செய்யும்போது, அதுதானாகவே தன்னை சுத்திகரித்துக்கொள்ளாது. மனந்திரும்புதலின் இருதயத்தோடும், தாழ்மையோடும் நம்முடைய பாவத்தை நாம் அறிக்கையிட்டு அவற்றை சுத்திகரிக்கும் தேவனுடைய பரிசுத்த ஒளியிடத்தில் சமர்பிக்க வேண்டும். அவைகளிலிருந்து விடுபட்டு தேவனிடத்திற்கு திரும்ப வேண்டும். நம்முடைய இருதயத்தை சுத்திகரிக்கும் வல்லமை கொண்ட ஒரே தேவன், நமக்கு மன்னிப்பை அருளி, அவரோடு ஒப்புவரவாகும்படி செய்வார். 

அறிவின் எல்லைகளைக் கடந்து

கோவிட்-19 தொற்றின் காரணமாக, தங்கள் வேலைகளை இழந்த அநேகருடைய வரிசையில் என் கணவரும் ஒருவர். அது, எங்கள் வாழ்வின் கடினமான நாள். தேவன் எங்கள் தேவைகளை சந்திப்பார் என்று நாங்கள் விசுவாசித்தோம். ஆனால் அது எப்படி நடக்கும் என்ற நிச்சயமில்லாமை எங்களை பயமுறுத்தியது.

குழப்பமான என் மனநிலைகளை கடக்கையில், பதினாறாம் நூற்றாண்டின் கவிஞர், சிலுவையின் ஜான் என்பவரின் பாடல்வரிகளை நினைத்து பார்த்தேன். “போகும்பாதை அறியாமல், உள்ளே சென்றேன்” என்று தலைப்பிடப்பட்ட அந்த பாடல், அர்பணிப்பின் பிரயாணம் மனிதஅறிவின் அனைத்து எல்லைகளையும் கடந்து, அனைத்திலும் தெய்வீகத்தை கண்டுகொள்ளும் ஆச்சரியத்தை சித்தரிக்கிறது.. எனவே நானும், எனது கணவரும் அந்த காலகட்டத்தில் அதைச் செய்ய முயற்சித்தோம். எங்களால் புரிந்துகொள்ளக்கூடிய, சமாளிக்கக்கூடியவைகளின் மீதிருந்த எங்கள் கவனத்தை; எங்களை சுற்றிலும் அழகான, எதிர்பாராத, விந்தையான வழிகளில் வெளிப்படும் தேவன் மீது திருப்பினோம்.

பவுல் அப்போஸ்தலன், காணப்படுகிறவைகளிலிருந்து காணப்படாதவைகளுக்கு, வெளித்தோற்றத்திலிருந்து உள்ளான நிஜத்திற்கு, தற்காலிக துன்பங்களிலிருந்து “மிகவும் அதிகமான நித்திய கனமகிமைக்கு” விசுவாசிகளை அழைக்கிறார் (2 கொரிந்தியர் 4:17).

அவர்களுடைய போராட்டங்களை குறித்து கரிசனை இல்லாமல் பவுல் இவ்வாறு வலிறுயுறுத்தவில்லை மாறாக அவர்கள் புரிந்தகொள்ளக் கூடியவைகளை அவர்கள் விட்டுவிடுகையில் தான் அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கும் ஆறுதல், சந்தோஷம் மற்றும் நம்பிக்கையை அவர்களால் அனுபவிக்க கூடும் என்று அவர் அறிந்திருந்தார். (வச.10,15-16). கிறிஸ்துவின் ஜீவியம் எல்லாவற்றையும் புதிதாக்குகிறது என்பதை அவர்களுக்கு அறியச்செய்வதற்காகவே பிரயாசப்படுகிறார்.

அவருடைய சமாதானம்

என்னுடைய பணியிடத்தில் ஏற்பட்ட சூழ்ச்சிகளை, பல மாதங்களாய் என்னால் சமாளிக்க முடிந்தது. கவலைப்படுவது என்பது எனக்கு இரண்டாம் பட்சம். நான் ஆச்சரியப்படும் வகையில் சமாதானமாய் உணர்ந்தேன். கவலைப்படுவதற்கு மாறாக, என்னுடைய எண்ணமும், மனமும் அமைதலாக இருந்தது. இந்த சமாதானம் தேவனிடத்திலிருந்தே வந்திருக்கும் என்பதை நான் அறிவேன். 

அதற்கு முற்றிலும் முரணாய், என்னுடைய வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் எல்லாம் நன்றாக நடந்துகொண்டிருந்த போதும் என் இருதயம் மிகவும் அமைதலற்று இருந்தது. நான் தேவனையும், அவர் நடத்துதலையும் நம்புவதை விட்டுவிட்டு, என் சுயதிறமையின் மீது நம்பிக்கை வைத்ததே அதற்கான காரணம் என்பதையும் நான் அறிவேன். என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்து, மெய்யான தேவசமாதானம் என்பது சூழ்நிலைகள் தீர்மானிப்பது அல்ல; மாறாக, அது தேவனை நம்புவதாலே உண்டாகும் என உணர்ந்தேன்.

நம் சிந்தை உறுதியாயிருக்கையில், தேவசமாதானம் நமக்கு கிடைக்கும் (ஏசாயா 26:3). ‘உறுதி’ என்ற எபிரெய வார்த்தையின் அர்த்தம், “சாய்ந்து கொள்வது” என்பதாகும். நாம் அவர்மீது சாய்ந்து கொள்ளும்போது, அவருடைய மெய்யான இளைப்பாறுதலை நாம் அனுபவிக்கலாம். அவர் அகந்தையுள்ளவர்களையும் துன்மார்க்கரையும் தாழ்த்தி, அவரை நேசிக்கிறவர்களின் வழிகளை செம்மையாக்குகிறவர் என்பதை நினைவுகூர்ந்து தேவனை நாம் நம்பலாம் (வச. 5-7). 

என் கடினமான வேளைகளில் நான் சமாதானத்தை அனுபவிக்கையில், தேவசமாதானம் என்பது துன்பங்களே இல்லாத நிலை அல்ல என்றும், துன்பங்களின் நடுவிலும் நம்மை மிக பாதுகாப்பாய் உணரச்செய்வதே தேவசமாதானம் என்பதை நான் கண்டுபிடித்தேன். மிகவும் கடினமான வாழ்க்கைச் சூழல்களிலும் நம் அறிவையும், புரிதலையும் கடந்து நம் இருதயத்தை இந்த தேவசமாதானம் ஆளுகைச் செய்கிறது (பிலிப்பியர் 4:6-7).

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இயேசுவின் அதிகாரம்

பல வருடங்களாக போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்த என் மகன் ஜியோப்பை இயேசு விடுவித்த பிறகும், எனக்கு இன்னும் சில கவலைகள் இருந்தது. நாங்கள் ஒன்றாக இருந்தாலும், அவனுடைய எதிர்காலத்தைவிட அவனுடைய கடினமான கடந்த காலத்தைக் குறித்து நான் அதிக கவலைப்பட்டேன். போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் பெற்றோர்கள் அவர்களை மீண்டும் மீண்டும் சரிசெய்யவேண்டிய அவலம் ஏற்படுகிறது. ஓர் குடும்பக் கூடுகையில் நான் ஜியோப்பை பிடித்து இழுத்து, அவனிடம், “நமக்கு ஒரு எதிரி இருக்கிறான். அவன் மிகவும் வலிமையானவன் என்பதை புரிந்துகொள்” என்றேன். அவனும் “எனக்கு தெரியும் அப்பா, அவனுக்கு வலிமை இருக்கிறது ஆனால் அதிகாரம் இல்லை” என்று பதிலளித்தான். 

அந்த தருணத்தில், நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்டு, அவரை நாடுகிறவர்களின் வாழ்க்கையை மறுரூபமாக்குகிற இயேசுவை நான் நினைவுகூர்ந்தேன். அவர் பரமேறி செல்வதற்கு முன்பு தன்னுடைய சீஷர்களைப் பார்த்து, “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய்...” (மத்தேயு 28:18-19) என்று கொடுக்கப்பட்ட கட்டளையையும் நான் நினைவுகூர நேரிட்டது. 

சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த இயேசு, நமது கடந்தகாலம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் நாம் அவரிடத்தில் வருவதற்கு வழி செய்துள்ளார். அவர் நமது கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் தன் கையில் வைத்திருக்கிறார். அவர் எப்பொழுதும் நம்முடன் இருப்பார் என்று வாக்களிக்கப்பட்டிருப்பதால் (வச. 20), அவர் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவார் என்றும், நம்முடைய ஜீவியம் அவரது பலத்த கரங்களில் உள்ளது என்றும் நாம் உறுதியாக நம்பலாம். நாம் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நல்ல நம்பிக்கையை இயேசு நமக்கு தருகிறார். பிசாசும் உலகமும் தற்காலிகமான இவ்வுலகத்தில் சில வல்லமைகளைக் கொண்டு செயலாற்றலாம். ஆனால் “சகல அதிகாரமும்” என்றென்றும் இயேசுவுக்கே சொந்தமானது. 

 

தேவனை நேசிக்காமல் இருக்கமுடியாது

தற்போது வளர்ச்சிப்பெற்றுள்ள என்து மகன் சேவியர், மழலையர் பள்ளியில் இருந்தபோது, அவன் கைகளை அகல விரித்து, “நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என்று சொன்னான். நானும் என் நீண்ட கைகளை விரித்து, “நானும் உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என்று பதிலுக்கு சொன்னேன். அவன் தன் கைகளை தன் இடுப்புப் பகுதியில் வைத்தவாறு, “நான் தான் உன்னை முதலில் நேசித்தேன்” என்றான். நான் தலையை அசைத்து ஆமோதித்தேன். “தேவன் முதலில் உன்னை என் கருவில் வைத்தபோதே நான் உன்னை நேசித்தேன்” என்றேன். சேவியரின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. “நீங்கள் வெற்றி பெற்றீர்கள்” என்றான். “இயேசு நம் இருவரையும் முதலில் நேசித்ததால், நாம் இருவருமே வெற்றிபெறுகிறோம்” என்று நான் சொன்னேன்.

சேவியர் தனது முதல் குழந்தையின் பிறப்புக்கு தயாராகிக்கொண்டிருக்கும்போது, அவன் தனது மகனை பிற்காலத்தில் நினைவுகூரும்போதெல்லாம் அவன்மீது அன்புசெலுத்தியதில் மகிழ்ச்சியடையவேண்டும் என்று நான் வேண்டுதல்செய்கிறேன். ஆனால் நான் ஒரு பாட்டியாகத் தயாராகும்போது, சேவியரும் அவருடைய மனைவியும் ஓர் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்று என்னிடம் சொன்ன தருணத்திலிருந்து நான் என் பேரனை எவ்வளவு நேசித்தேன் என்று ஆச்சரியப்படுகிறேன்.

இயேசு நம்மீது வைத்திருக்கும் அன்பு, அவரையும் மற்றவர்களையும் நேசிக்கும் திறனை நமக்குத் தருகிறது என்று அப்போஸ்தலர் யோவான் உறுதிப்படுத்துகிறார் (1 யோவான் 4:19). அவர் நம்மை நேசிக்கிறார் என்பதை அறிவது, அவருடனான நமது தனிப்பட்ட உறவை ஆழப்படுத்தும் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது (வச. 15-17). அவர் நம்மீது வைத்துள்ள அன்பின் ஆழத்தை நாம் உணர்ந்துகொள்ளும்போது (வச. 19), நாம் அவருக்கான அன்பில் வளரலாம். மேலும் பிற உறவுகளில் அன்பை வெளிப்படுத்தலாம் (வச. 20). அன்பு செய்வதற்கு இயேசு நமக்கு அதிகாரம் அளிப்பது மட்டுமல்லாமல், அன்பு செலுத்தும்படியும் கட்டளையிடுகிறார்: “தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்” (வச. 21). யார் அதிகம் நேசிக்கிறவர்கள் என்று வரும்போதெல்லாம், தேவனே எப்போதும் வெற்றிபெறுகிறார். நாம் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், நேசிப்பதில் தேவனை ஜெயிக்கமுடியாது.

 

விழித்திருந்து ஜெபியுங்கள்

ஆவிக்குரிய போராட்டங்களில் ஈடுபடும்போது, கிறிஸ்தவ விசுவாசிகள் ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதை ஞானமற்ற முறையில் செய்தால் எவ்வளவு ஆபத்தானது என்பதை புளோரிடாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கண்டுபிடித்தார். அவர் ஜெபிக்கும்போது கண்களை மூடுவது வழக்கம். அவ்வாறு ஒர்நாள் தன்னுடைய காரை ஓட்டிக்கொண்டு செல்கையில், ஜெபிக்க தன் கண்ணை மூடமுற்பட்டு, ஓர் நிறுத்தத்தில் நிற்கத்தவறி, வேறு பாதை வழியாக குறுக்கிட்டுபோய், ஓர் வீட்டு உரிமையாளரின் முற்றத்தில் தன் காரை நிறுத்தினார். அதிலிருந்து தன்னுடைய காரை பின்பாக எடுக்க முயன்று தோற்றுப்போனார். காயம் ஏற்படவில்லை என்றாலும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காகவும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காகவும் அவருக்கு போலீஸ் அபராதம் விதித்தது. இந்த ஜெப வீராங்கனை எபேசியர் 6:18-ன் முக்கிய பகுதியை தவறவிட்டுவிட்டார்: “விழித்துக்கொண்டிருங்கள்!”

எபேசியர் 6ல் இடம்பெற்றுள்ள சர்வாயுதவர்கத்தின் பகுதிகளாக, அப்போஸ்தலர் பவுல் இரண்டு இறுதி காரியங்களை உள்ளடக்குகிறார். முதலில், நாம் ஆவிக்குரிய யுத்தங்களை ஜெபத்துடன் செய்யவேண்டும். இதன் பொருள் ஆவியில் ஜெபிப்பது—அவருடைய வல்லமையை நம்புவது. மேலும், அவருடைய வழிகாட்டுதலில் இளைப்பாறுதலடைதல், அவரது தூண்டுதல்களுக்கு பதிலளித்தல், எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லா வகையான ஜெபங்களையும் ஜெபித்தல் ஆகியவைகளும் உள்ளடங்கும் (வச. 18). இரண்டாவதாக, “விழித்துக்கொண்டிருங்கள்” என்று பவுல் நம்மை உற்சாகப்படுத்துகிறார். இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவதற்கும் (மாற்கு 13:33), சோதனையை ஜெயிப்பதற்கும் (14:38), மற்ற விசுவாசிகளுக்காகப் பரிந்துபேசுவதற்கும் ஆவிக்குரிய விழிப்புணர்வு நமக்கு உதவும் (எபேசியர் 6:18).

நாம் தினமும் ஆவிக்குரிய யுத்தங்களில் ஈடுபடும்போது, தீய சக்திகளை எதிர்த்துப் போரிட்டு, கிறிஸ்துவின் வெளிச்சத்தால் இருளைத் துளைத்து, விழித்திருந்து ஜெபிக்கும் அணுகுமுறையுடன் நம் வாழ்வில் ஜெயம்பெறுவோம்.